மத்திய-மாநில அரசுகளின் பெரும்பாலான நிதி உதவிகள் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளில் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் ஏழைகள் பலர் வங்கி கணக்கு இல்லலாமல் இருந்த நிலையில் அனைவரும் வங்கி கணக்கை தொடங்குவதற்காக கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ‘ஜன்தன்’ திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் மூலம் குறைவான கட்டண இருப்பு இன்றி வங்கி கணக்கை பராமரிக்க முடியும். இதன்மூலம், கோடிக்கணக்கான இந்தியர்கள் முறையான நிதி அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டனர். ‘ஜன்தன்’ திட்டத்தின் கீழ் 56 கோடியே 16 லட்சம் பேர் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர். இவர்களுடைய வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 755 கோடி பணம் இருப்பு உள்ளது. இந்தநிலையில், கே.ஒய்.சி. (உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள்) என்ற வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும், முகவரியையும் வங்கிகள் சரிபார்க்கப் பயன்படுத்தும் செயல்முறையை (அப்டேட்) சேர்க்கவில்லை என்றால் ‘ஜன்தன்’ வங்கி கணக்குகள் செப்டம்பர் 30-ந்தேதிக்கு பிறகு செயல்படாது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் வங்கிகள் கேட்கும் அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களுடன் கே.ஒய்.சி. செயல்முறையில் கூடுதல் விவரங்களை இணைக்க ‘ஜன்தன்’ வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்த தகவலில் உண்மை இல்லை. கே.ஒய்.சி. விவரங்களை வாடிக்கையாளர்கள் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயம்தான். அதேநேரத்தில் கே.ஒய்.சி. தகவல் சேர்க்கப்படவில்லை என்றாலும் வங்கி கணக்கு செயல்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Comments are closed.