Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. வடமலையின் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தந்தையின் இறப்பு குறித்து தகவல் அறிந்த அவர் குவைத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்தார். பிறகு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று தந்தையின் உடலை கேட்டுள்ளார். அதற்கு மருத்துவமனை ஊழியர்கள் வடமலையின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்கள் என்று கூறி சிலர் வாங்கி சென்று விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு வடமலையின் மகன் செல்வராஜ் மற்றும் அவருடன் வந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எங்களிடம் உடலை கொடுக்காமல் யாரிடம் கொடுத்தீர்கள்? என ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார். அதில், தந்தையின் உடலை மீட்டுத் தர வேண்டும், மின்சாரம் தாக்கி இறந்த தந்தையின் உயிரிழப்புக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும், அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வடமலையின் உடலை வாங்கி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்