மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாத திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.அறிவிப்பு..!
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை காட்டாத திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்
நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு சீர்கேடுகளால் மக்கள் கடும் அவதியுற்று வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், 40 ஏக்கர் பரப்பளவில் சுமார் 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3600-க்கும் மேற்பட்ட பேருந்துகளைக் கையாளும் 2 வகையில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. திருச்சியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த சிறிய மழைக்கே, புதிய பேருந்து நிலையக் கட்டடம் தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கூரைகளின் வழியே மழைநீர், பயணிகள் நிற்கும் நடைமேடையில் விழுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பஞ்சப்பூரில் பேருந்து முனையம் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், இதுவரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. நிர்வாகத் திறனற்ற திமுக அரசு இம்முனையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்யாமல் அவசர கதியில் திறந்துள்ளதாக மக்கள் குமுறுகின்றனர்.
இதேபோல மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் இடிக்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் மற்றும் தலைமைத் தபால் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்து உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் செல்வதால், மாநகரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. மேலும், திருச்சி மாநகரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் மாரிஸ் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பிரதான சாலையான பாலக்கரை சாலையில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் மக்கள் மற்றும் அந்தப் பகுதி வியாபாரிகள் பல்வேறு வகைகளில் சிரமப்படுகின்றனர். மக்கள் நலனில் சிறிதும் அக்கறை காட்டாத திமுக அரசை கண்டித்தும்,
திருச்சி மாவட்ட, மாநகர நிர்வாகங்களை கண்டித்தும், பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், மேம்பால காட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும், பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும், பாலக்கரை சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கோரியும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், 3.7.2025 – வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், மரக்கடை எம்.ஜி.ஆர். திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையிலும், திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி மாமன்ற முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.