திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று( ஜூன் 20) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திருச்சி- சென்னை பைபாஸ் ரோடு சஞ்சீவி நகர் பகுதியில் ரயில்வே சுரங்க பாதை அமைக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். ரயில்வே துறை அதிகாரிகளிடம் பேசி அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவெறும்பூர், மஞ்சத்திடல் அருகே ரயில்வே மேம்பால பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் அந்த பணிகள் தொடங்கும். வந்தே பாரத் ரயிலை பராமரிக்கும் பணிமனையை திருச்சியில் தொடங்க கோரிக்கை வைத்துள்ளோம். மீண்டும் டெல்லி செல்லும் போது ரயில்வே அமைச்சரிடம் இது குறித்து பேசுவேன். வந்தே பாரத் பணிமனை திருச்சியில் அமைக்கப்பட்டால் வேலை வாய்ப்பு பெருகும். வந்தே பாரத் ரயிலும் திருச்சியை மையப்படுத்தி இயக்க அதிக வாய்ப்பு உள்ளது. அந்த பணிமனையை திருச்சியில் தொடங்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வோம். திருச்சி கோட்டை ரயில்வே மேம்பால பணிகள் 2026 ஜூன் மாதம் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர். திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது என்று தெரிவித்தார். பேட்டியின்போது மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, வடக்கு மாவட்ட செயலாளர் டி.டி.சி.சேரன், தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.