அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரப்பட்டதால் நடுரோட்டில் திணறிய லாரி- சாலையில் கொட்டிய குப்பைகள்…! ( வீடியோ இணைப்பு)
கோவையில் இருந்து திருச்சி நோக்கி குப்பைக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை சத்யராஜ் என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரி இன்று( ஜூன் 6) அதிகாலை திருவானைக்காவல் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென கழிவுகள் சரிந்து நடுரோட்டில் கொட்டியது. விபரீதத்தை உணர்ந்த டிரைவர் உடனடியாக லாரியை நிறுத்தினார். இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 2 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. ஒரு பொக்லைன் பக்கவாட்டில் லாரி கவிழ்ந்து விடாமல் முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்டது. மற்றொரு பொக்லைன் லாரியில் இருந்த குப்பைகளை அகற்றியது. இந்தப் பணி சுமார் 5 மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஒரு வழி பாதையாக சென்றன. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் என தெரிய வந்தது. மேலும், இந்த குப்பை கழிவுகள் அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும்போது கீழே கொட்டியதும் தெரிய வந்தது.இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.