2025-26-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் நேற்று( மே 4) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்தது. இந்த தேர்வை எழுத 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் என மொத்தம் 22 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சுமார் 1.5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 44 தேர்வு மையங்களில் 21 ஆயிரத்து 960 பேர் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து இருந்தனர். தேர்வு மையத்துக்குள் காலை 11.30 மணியில்இருந்து தேர்வர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 1.30 மணி வரை உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னர், தேர்வு மையம் மூடப்பட்டு, தேர்வர்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. முன்னதாக தேர்வு மையத்துக்கு வந்த மாணவ-மாணவிகளிடம் ‘நீட்’ தேர்வுக்கே உரித்தான கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன. குறிப்பாக மாணவிகள் தலைவிரிக்கோலம் காட்சி இந்த ஆண்டும் வழக்கம்போல் அரங்கேறியது. பெரும்பாலான மாணவிகள் சாதாரண உடைகளையே அணிந்து வந்திருந்தனர். இந்தநிலையில், 720 மதிப்பெண்களுக்கான இந்த தேர்வில் 180 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் கேள்விகள்
கேட்கப்பட்டிருந்தன. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள், தவறான வினாவிற்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும். இந்த தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் வினாத்தாளில் 117-வது கேள்வியாக ஈஸ்ட்டால் தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத மதுபானம் எது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் பீர், ரம், பிராந்தி, விஸ்கி ஆகியவை ஆகும். இந்த 4 விடைகளில் சரியானதை தேர்வு செய்து எழுத வேண்டும். இந்த கேள்விக்கு சரியான விடை பீர் என்பதாகும். இதை சரியாக எழுதியிருந்தால் 4 மதிப்பெண்கள் கிடைக்கும். இந்த கேள்விக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்க எத்தனையோ விஷயங்கள் இருக்கும் நிலையில் மதுபானம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது ஏன் என தெரியவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். இந்தக் கேள்வியைப் படித்துப் பார்த்த மாணவ, மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

Comments are closed.