Rock Fort Times
Online News

லட்சங்களில் இருந்து கோடிகளுக்கு உயர்ந்த சொத்து மதிப்பு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரமேஷ் பாபு மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு !

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலராக இருப்பவர் டாக்டர்.ரமேஷ்பாபு. 2002ம் ஆண்டு அரசு மருத்துவராக பணியில் சேர்ந்த இவர் 2016 ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலராகவும், 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்ட உணவுப்வபாதுகாப்புத்துறை நியமன அலுவலராகவும் பணியாற்றினார். பின்பு 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தற்பொழுது வரை திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் 2021 வரையுள்ள காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி 2018 ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக ரமேஷ் பாபு மற்றும் அவருடைய மனைவி சர்மிளா பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு மொத்தமாக ரூ.18 லட்சத்து 64 ஆயிரத்து,428 ரூபாயாக இருந்துள்ளது.

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 2018 முதல் 2021ம் ஆண்டிற்கிடைப்பட்ட காலத்தில் ரமேஷ்பாபு மற்றும் அவருடைய மனைவி சர்மிளா பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரூ. 2 கோடியே,36 லட்சத்து,60 ஆயிரத்து,294 ரூபாயாக இருந்துள்ளது. இதில் அவர் பெற்ற மாத வருமானம், அவருடைய மனைவி பெயரில் வாங்கிய கடன்கள் உள்ளிட்டவற்றை தவிர அவரின் சொத்து மதிப்பு 92.69 சதவீதம் உயர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் அவருடைய மனைவி சர்மிளா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்