Rock Fort Times
Online News

லாட்டரியில் விழுந்த பரிசுத்தொகையை கொடுக்காமல் ஏமாற்றியவர் கைது- சொகுசு கார் பறிமுதல்…!

தமிழகத்தில், லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கி அதனை சிலர் விற்று வருகின்றனர். அந்தவகையில் திருச்சியில் சமீபகாலமாக வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதில், ஈடுபடுவோரை போலீசார் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். இருப்பினும் லாட்டரி விற்பனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த அருள்பாண்டியன் (வயது 22) என்ற வாலிபர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், திருச்சியில் லாட்டரி சீட்டு வாங்கியதில் பத்தாயிரம் ரூபாய் பரிசு தொகை விழுந்தது. அதை லாட்டரி வியாபாரிகள் தர மறுக்கின்றனர். கேட்டால் மிரட்டவும் செய்கின்றனர். ஆகவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்தோணி பிரவீன், அந்தோணி பிரதீப் ஆகியோர் அருள் பாண்டியனிடம் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரிய வந்தது. இதில் அந்தோணி பிரவீனை போலீசார் கைது செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் அந்தோணி பிரதீப் தலைமறைவாகிவிட்டார். கைதானவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள், பணம், செல்போன், இருசக்கர வாகனம், சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தலை மறைவாக உள்ள அந்தோணி பிரதீப்பை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்