தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள், டீ- கப்கள் உள்ளிட்டவைகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் புத்தூர் பகுதியில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள், புத்தூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஓரு டீக்கடையில் நேற்று ( டிச.19 ) மாலையில் சோதனைக்கு சென்றனர். அப்போது கடையிலிருந்தவர்கள் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும் தொடர்ந்து தகராறும் ஏற்பட்டது. இதில் கடையிலிருந்தவர்கள் தாக்கியதில் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் காயமடைந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்த சென்ற சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.