Rock Fort Times
Online News

திருச்சியில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை: பெண் கைது…! ( வீடியோ இணைப்பு )

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே ரோஷன் கன்சல்டண்டி என்கிற வெளிநாட்டுக்குளிர்பானங்கள் வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் இன்று(13-12-2024) குடிபெயர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான பாத்திமா என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சோதனை குறித்து குடிபெயர்வோர் பாதுகாப்பு அதிகாரி ராஜ்குமார் கூறுகையில், கம்போடியா, மியான்மர், லாவோஸ் போன்ற நாடுகளில் பொதுமக்களை தொலைபேசி மூலம் அழைத்து அவர்களிடம் பணம் பறிக்கும் மோசடி செய்வதற்கான நிறுவனங்கள் அதிக அளவில் செயல்படுகிறது. அந்த மோசடி நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களை ஏமாற்றி சட்டவிரோதமாக செயல்படும் வெளிநாட்டு வேலைக்கு ஏஜென்சிகள் அனுப்புகின்றனர். அவர்களுக்கு நல்ல சம்பளம், நல்ல வேலை என கூறி முதலில் டூரிஸ்ட் விசா மூலம் பேங்காக் நாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அந்த நிறுவனங்கள் செயல்படும் வெவ்வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்களை அந்த நிறுவனத்தில் பணி அமர்த்தி பொதுமக்களுக்கு தொலைபேசியில் அழைத்து மோசடி செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். அந்த இளைஞர்கள் அந்த வேலையை செய்ய மறுத்தால் அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு தொந்தரவுகளை தருகின்றனர். அப்படி துன்புறுத்தப்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் இந்திய தூதரகம் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த 31 இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுதவிர 12 பேர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்பாகவே இதுகுறித்து அறிந்து கொண்டு வெளிநாடு செல்லாமல் இருந்து விட்டனர். திருச்சியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஒரு ஏஜென்சி மூன்று இளைஞர்களை கம்போடியா நாட்டிற்கு மோசடி செய்யும் நிறுவனத்திற்கு வேலைக்கு அனுப்புவது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதில் ஒருவர் மோசடி நிறுவனத்திற்கு தான் தங்களை அழைத்து செல்கிறார்கள் என தெரிந்து வெளிநாடு செல்லவில்லை. மற்ற இருவர் வெவ்வேறு மாநிலங்கள் மூலம் செல்ல முற்பட்டனர். அவர்களை நாங்கள் கண்டறிந்து இந்த மோசடி வேலை குறித்து எடுத்துக் கூறியதும் அவர்களும் செல்லவில்லை. அந்த தகவலின் அடிப்படையில் திருச்சியில் உள்ள அந்த நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் உடன் இணைந்து நாங்கள் சோதனை மேற்கொண்டோம். ஒருவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறோம். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புவோர் அவர்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமாக தான் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும். அரசின் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் ஏஜென்சிகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். சென்னையில் ஒரே நாளில் 15 இடங்களில் சோதனை செய்து ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 5 பேரை கைது செய்துள்ளோம் என்றார்

.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்