தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்- குழுவாக செல்லும் பக்தர்களுக்கு தனி வசதி…!
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குநர் இரா.மோகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சி நடைபெறும். இதில், தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, இந்த ஆண்டும் 15.11.2024 முதல் 16.01.2025 வரை, சென்னை (கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (அல்ட்ரா டீலக்ஸ்) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (என்எஸ்எஸ்) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2024 முதல் 30.12.2024 மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2024 முதல் 29.12.2024 வரை இச்சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது. இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாகப் பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாகப் பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழுவாகச் செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும், மொபைல் செயலி (TNSTC Official app) மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 94450 14452, 94450 14424 மற்றும் 94450 14463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.