Rock Fort Times
Online News

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை: திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி…!

சில நாடுகளில் குரங்கம்மை என்ற வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் குரங்கம்மையால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும் விமான நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் குரங்கம்மை தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சுகாதாரத்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.


பின்னர், செய்தி யாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகளை வெப்பத்தை அளவிடும் கருவிகள் மூலம் பரிசோதனை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 58 லிருந்து 64 சர்வதேச விமானங்கள் வருகிறது. இதுவரை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகளை சோதனை செய்துள்ளோம். சர்வதேச விமான நிலையங்கள் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குரங்கம்மை சிகிச்சைக்காக பிரத்தியேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மழை பெய்வதால் எட்டு மாதங்களில் டெங்குவின் பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆனால், இறப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது. இந்த ஆண்டு நான்கு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மழை காலம் என்பதால் டெங்குவின் பாதிப்பு அதிகரிக்க கூடும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட 11 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு ஒரு சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டதையடுத்து சைனீஸ் நூடுல்ஸ் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த சிறுமி ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி இருந்தாலும் கடையில் ஆய்வு செய்யப்பட்டு அங்கு காலாவதியான 800 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற புகார்கள் வந்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்