தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் தாலுகாவை சேர்ந்த ராஜ்மோகன் மனைவி ரேகா (36). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தோழி மூமன் சங்கீத் மனைவி டெல்பின் தெரசா (22). அவரது இரண்டரை வயது மகள் மற்றும் ரேகாவின் அக்கா இந்துமதி (36), இவரது மகள் மகாலட்சுமி (14), ரேகாவின் மகள்கள் நந்தனா (13), மிருதுளா (8), ஆகியோர் ஒரு காரில் சுற்றுலா செல்வதற்காக புதுச்சேரி புறப்பட்டனர். காரை புதுச்சேரியை சேர்ந்த பிரவீன்குமார் (40) ஓட்டினார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூர் கிராமம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இந்துமதி, நந்தனா, டிரைவர் பிரவீன்குமார் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 3 பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.