திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, துபாய், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு ம், சென்னை, திருவனந்தபுரம், மும்பை, பெங்களூரு, கோவா உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சார்ஜா, துபாய் செல்லும் விமானங்கள் இன்று (ஜூன் 24) திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல இன்று அதிகாலை 4 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.55 மணிக்கு துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. மேலும், திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு சார்ஜா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டது. இதனால், அந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
Comments are closed.