மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தற்கொலை முயற்சி!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த தனசெல்வன் ,சென்னை மத்திய நூல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா். இவரது மனைவி விமலா இவர்களது மகனுக்கு சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டா எம்பிபிஎஸ், சீட் வாங்கி தருவதாக கூறி கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள எஸ்எல்ஆர் டூட்டி பெய்டு ஷாப் நடத்தி வந்த பிர்தோஸ் சலாவுதீன் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 23 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுள்ளார். ஆனால் மருத்துவ படிப்பு சீட்டு வாங்கித் தராமல் வெகு நாட்களாக அலைக்கழித்து ஏமாற்றியதாகவும்,இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையம், ஐஜி அலுவலகம், ஆணையாளர் அலுவலகம், முதலமைச்சர் செல் பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காநல்லூர் காவல் நிலையம் என அனைத்திலும் தொடர்ந்து மூன்று வருடங்களாக புகார் கொடுத்துள்ளார்.புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனவேதனை அடைந்த விமலா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் ஊற்றி தற்கொலை முயற்சியில் இறங்கினார். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவர் மீது நீரை ஊற்றி காப்பாற்றினர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்கொலை முயற்சி மேற்கொண்ட பெண்ணை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

