தமிழகத்தில் 10, 11, 12ம்வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறுகிறது. அதன்படி,மார்ச் 1ம் தேதி 12ஆம் வகுப்பு, மார்ச் 4ம் தேதி 11 ஆம் வகுப்பு, மார்ச் 26ம் தேதி 10ம் வகுப்பிற்கு பொது தேர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களுக்கும் தேர்வு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. தேர்வுப் பொறுப்பாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் சென்று முதன்மை கல்வி அலுவலர்களோடு இணைந்து வினாத்தாள் மையத்தில் வைக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் ஆய்வு செய்கிறார்கள். அதன்படி, பொதுத்தேர்வுகள் நடத்துவது தொடர்பான வழிகாட்டு ஆலோசனைக் கூட்டம், திருச்சி தெப்பக்குளம் பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட தேர்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகள் இணை இயக்குனர் ராமசாமி தலைமை வகித்தார். அவர் பொதுத் தேர்வு நடத்தும் அலுவலர்களுக்கு வழிகாட்டு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார். இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் கே. கிருஷ்ணப்பிரியா, மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 500 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுத்தேர்வில் எவ்வித குளறுபடிகளும் ஏற்படாத வகையில் வினாத்தாள் கட்டுக் காப்பாளர், வழிதட அலுவலர், முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், பறக்கும் படை என அனைத்து தரப்பினருக்கும் முழுமையாக வழிகாட்டும் விதமாக தேர்வு சார்ந்த கூட்டங்களையும் நடத்துவார்கள் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.