Rock Fort Times
Online News

திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி மர்மச்சாவு !- போலீசார் விசாரணை!

திருச்சி, பொன்மலையில் மத்திய அரசின் ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு சுமார் 4 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில்,கீழ கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த முருகன் (54) என்பவர் எம்.எம் டபுள்யூ பிரிவில் பணியாற்றி வந்தார். பணி முடிவடைய சிறிது நேரமிருந்த நிலையில், பணிமனையின் உள்பகுதியில் உள்ள 3வது ஷண்டிங்க் பாதையில், ரயில் என்ஜினுக்கு அடியில் சடலமாக கிடப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து சக தொழிலாளர்கள் நிகழ்விடத்தில் குவிந்தனர். அங்கு முருகன் உடல் சந்தேகத்துக்கிடமான வகையில் ரயில் என்ஜினின் அடிப்பகுதியில் துண்டான நிலையில் கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில், பொன்மலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பணிமனையில் அண்மைக்காலமாகவே வடமாநிலத் தொழிலாளர்களுக்கும், தமிழக தொழிலாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கமாகியுள்ளது. இந்நிலையில், முருகன் திடீரென உடல் துண்டான நிலையில், இறந்து கிடப்பது சக தொழிலாளர்களுக்கிடையே சந்தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர். பணிமனை உள்பகுதியில் உள்ள ரயில் பாதையில், பராமரிப்பு பணிகளுக்கு வரும் ரயில் என்ஜின்கள் மிகவும் மெதுவாகவே செல்லும். அவ்வாறிருக்க, முருகன் தற்கொலை செய்யும் நோக்கில் படுத்திருந்தால் ரயில் ஓட்டுநர் என்ஜினை நிறுத்தியிருக்க முடியும். அல்லது அவர் திடீரென குறுக்கே பாய்ந்திருந்தால் உடல் சிதைந்து இறந்திருக்க கூடும். ஆனால் அவரது உடலின் ஒரு பகுதி வெளியிலும் இடுப்புக்கு மேல்பகுதி தண்டவாளத்தின் நடுவிலும் உள்ள நிலையில் படுக்க வைத்திருப்பது போல கிடந்தது. எனவே இது குறித்து பல்வேறு சந்தேகங்களை தொழிலாளர்கள் எழுப்பியுள்ளனர். அவர் தற்கொலை செய்துகொண்டாரா ? அல்லது, யாரேனும் அவரை கொலை செய்யும் நோக்கில் தண்டவாளத்தில் படுக்க வைத்தனரா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்