Rock Fort Times
Online News

தஞ்சையில் டிராவல்ஸ் நடத்தி வந்த பெண் தலை துண்டித்து கொலை: 3 பேர் நீதிமன்றத்தில் சரண்…!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் டிராவல்ஸ் நடத்தி வந்த சரண்யா (35) என்ற பெண் நடுரோட்டில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக முன்னாள் . நிர்வாகியான சரண்யாவை, நேற்று மர்ம நபர்கள் சராமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், “மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரண்யா(35) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி சாமுவேல், சரவணன் என்ற இரு மகன்களுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர். கடந்த 2021-ல் சண்முகசுந்தரம் இறந்துவிட்டதால், சரண்யா தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன், என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர். நேற்று (மே 5) இரவு பாலன், தனது கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது மகன்களை அழைத்துக் கொண்டு சற்று முன்னதாக சென்றுள்ளார் அதன் பின்னர் சரண்யா தனது கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், சரண்யாவின் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் வெட்டினர். இதில், சரண்யா தலை துண்டிக்கப்பட்டதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக வாட்டாத்தி
கோட்டை போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கபிலன், குகன் உள்ளிட்ட 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்