திருச்சியில் புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்களில் யாருக்கெல்லாம் பட்டா கிடைக்கும்- “லிஸ்ட்” எடுத்தது மாநகராட்சி…!
புறம்போக்கு இடங்களில் நீண்ட காலம் குடியிருப்பவர்கள் பட்டா இல்லாமல் வசித்து வருகிறார்கள். அந்த இடங்களில் ஆட்சேபனை இல்லை என்றால் அவர்களுக்கு பட்டா வழங்கலாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்தவகையில் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி பகுதியில் புறம்போக்கு இடங்களில் குடியிருப்பவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல திருச்சி மாநகராட்சி பகுதிகளில் புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்கள் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சியை பொருத்தவரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 54-வது வார்டு பெரிய மிளகு பாறை பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 670-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள் என்று வருவாய் துறை வட்டாரங்கள் சொல்கின்றன. அதேபோல் பெரிய மிளகுபாறை காமராஜர் புரத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிப்பதாகவும், கோரிமேடு தெருவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு தாலுகா 27-வது வார்டு புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் 30 ஆண்டுக்கும் மேலாக 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிப்பதாகவும், 26-வது வார்டு திடீர் நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 50 குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், திருச்சி கிழக்கு தாலுகாவில் 12-வது வார்டில் 25 ஆண்டுகளாக 17 குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் வருவாய் துறை ஆவணங்களில் கூறப்படுகிறது. மேலும், 60-வது வார்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 70 குடும்பத்தினர் வசிப்பதாகவும், திருச்சி மேற்கு தாலுகாவில் 8-வது வார்டில் 40 ஆண்டுகளாக 10 குடும்பத்தினர் வசிப்பதகாவும், புத்தூர் திரு.வி.க. தெருவில் 25 குடும்பத்தினர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாகவும், ஆதி நகர் பகுதியில் 20 ஆண்டுகளாக 6 குடும்பத்தினர் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒட்டுமொத்தமாக திருச்சி மாநகரில் 1,128 குடும்பத்தினர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிப்பதாகவும், அவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு தடையில்லை என்பதற்கான சான்றை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் வழங்க இருக்கிறது. இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதனால் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ADVERTISEMENT… 👇
Comments are closed.