முசிறி அருகே பாறைகளை வெடி வைத்து தகர்த்தபோது விபரீதம்..!- அந்தரத்தில் பறந்து வந்து தார்சாலைகளை பதம் பார்த்த ராட்சத பாறைகள்…
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆனைப்பட்டியில் தனியார் நிறுவனம் ஒன்று கட்டுமான வேலைகளை மேற்கொண்டு வருகிறது. அங்கிருந்த பாறைகளை வெடி வைத்து அகற்றியதாக தெரிகிறது. அப்போது பாறைகளில் துளையிட்டு வெடிவைத்து பாறைகளை உடைத்தபோது எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய பாறைகள் அருகில் இருந்த முசிறி – தண்டலைபுத்தூர் தார் சாலையில் வந்து விழுந்துள்ளது. இதில் சாலைகள் பலத்த சேதமடைந்தது. பாறைகளை வெடி வைத்து உடைத்த போது அந்த வழியாக யாரும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து ஜே.சி.பி மூலம் சாலையில் விழுந்த பாறைகளை அப்புறப்படுத்திய பிறகு பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அந்த வழியே சென்று வந்தனர். மேலும் தார் சாலை சேதமடைந்துள்ளதால் நெடுஞ்சாலைத் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதில் சாலையோரத்தில் இருந்த மின் கம்பங்களும் லேசான சேதமடைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து முசிறி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.