தெரு நாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், திருவானைக்காவல் கோவில் இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…!
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோபி ஆச்சார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திருவானைக் காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இங்கு வந்து செல்லக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கோவில் பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது. கோவில் சன்னதி முன்புறம் உள்ள கொடிக்கம்பம் வரை தெரு நாய்கள் வந்து படுத்து கிடக்கின்றது. தெரு நாய்கள் கோயிலுக்குள் அசுத்தம் செய்வதால் ஆகம விதிப்படி அதை சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. மேலும் பக்தர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சில நாய்கள் பக்தர்களை விரட்டி கடிக்க பாய்கின்றன. மேலும், சிலர் பக்தர்கள் என்ற போர்வையில் மது அருந்தி விட்டு கோவிலுக்குள் உள்ளே சென்று படுத்து கிடக்கின்றனர். எனவே கோவில் சன்னதியின் புனிதத்தை காக்கும் பொருட்டும், பக்தர்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் நாய்களை உள்ளே வரவிடாமல் தடுத்தும் கோவிலில் புனிதம் காக்க வலியுறுத்தி மாநகராட்சி மற்றும் கோவில் உதவி ஆணையரிடம் மனு அளித்திருந்தேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோவில் உள்ளே நாய்கள் வருவதை தடுத்தும் பக்தர்களின் சுகாதாரம் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிட கோரி அதில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜம்புகேஸ்வரர் கோவிலில் தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடுவது குறித்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வாதிட்டார். கோவில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார். அப்பொழுது நீதிபதிகள் கோவிலுக்குள் வரும் பக்தர்களின் பாதுகாப்பை கோவில் நிர்வாகம் தான் உறுதிப்படுத்த வேண்டும். இந்த மனு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர், கோவில் இணை ஆணையர் திருச்சி மாநகராட்சி ஆணையர் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
Comments are closed.