சமீப காலமாகவே இளைஞர்களும் காதலர்களும் ஒருவருக்கொருவர் வித்தியாசமான பரிசுகளை வழங்க வேண்டும் என்ற தேடலில் இருக்கின்றனர்.இதனால் பல கலைகள் இங்கு பிரபலமாகி வருகின்றன. அப்படி பிரபலமானது தான் பிளட் ஆர்ட். அதாவது ஒருவரின் ரத்தத்தை சிறிய சிரஞ்ச் மூலம் எடுத்து, அதை வைத்து அவர் பரிசு கொடுக்க விரும்புகிற ஓவியத்தை வரைவது. தமிழகத்தில் பல பேர் இதை சிறு தொழிலாகவே செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.பல இளைஞர்களும் இதனால் ஏற்படக்கூடிய அபாயங்களை அறியாமல் இரத்தத்தை கொடுத்து, தங்களுக்கு விருப்பமானவர்களின் ஓவியங்களை வரைந்து வாங்கி உள்ளனர். சுகாதாரமற்ற முறையில் ஒரே ஊசியை பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாகும் இந்த விபரீத கலையை தடுக்குமாறு ஏற்கனவே குற்றசாட்டுகள் எழுந்தன.
சென்னையில் தி.நகர், வடபழனி போன்ற முக்கியமான இடங்களில் இந்த வியாபாரம் சூடு பிடிக்க, அரசின் கவனத்திற்கு கடந்த 2022ம் ஆண்டு இது சென்றது.
அப்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிளட் ஆர்ட் ஓவியங்களுக்கு தடை விதித்ததோடு, ரத்தத்தைக்கொண்டு ஓவியம் வரைவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
இது தமிழக அளவில் பல்வேறு சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திருச்சியில் இந்த பிளட் ஆர்ட் ஓவியங்கள் சமீப காலமாக இளசுகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. திருச்சி, திருவானைக்கோவிலில் முகிலன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட இந்த பிளட் ஆர்ட்டை பல இளைஞர்களுக்கு வரைந்து கொடுக்கிறார். இதற்காக இன்ஸ்டாகிராமில் தனக்கென பிரத்தியேகமாக ஒரு பக்கத்தை உருவாக்கி அதில்,ப்ளட் ஆர்ட் மூலம் வரையப்பட்ட ஓவியங்களை வீடியோ வடிவிலும் போட்டோக்களாகவும் பதிவேற்றம் செய்துள்ளார். இதை பார்த்து பல இளைஞர்களும் அவரிடம் ஆர்டர் கொடுக்க தொடங்கியுள்ளனர். இது திருச்சி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே விவாத பொருளாக மாறி உள்ளது. எப்படி தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட அந்த பிளட் ஆர்ட் ஓவியத்தை வரைந்து கொடுக்க முடியும். இதில் உடனடியாக அரசு தலையிட்டு பிளட்டர் ஓவியம் வரைந்து கொடுக்கும் முகிலன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Comments are closed.