கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார். குறிப்பாக பாதிக்கப்பட்ட உறவினர்கள் அனைவரிடமும் பேசி முடித்துள்ளார்.
இந்த வீடியோ கால் பேசும்போது, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்துள்ளனர். இதுதொடர்பாக கரூரில் அருண்ராஜ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கரூரைச் சேர்ந்த நபர்களின் உறவினர்களிடம் எங்கள் கட்சித் தலைவர் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர், பாதிக்கப்பட்ட
உறவினர்களிடம் பேசும்போது நீங்கள் தைரியமாக இருங்கள், நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று( அக்.8) டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம். அரசு நடவடிக்கைகளுக்கு இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

Comments are closed.