Rock Fort Times
Online News

பிரதமர் மோடி நாளை( மே 22) திறந்து வைக்கும் ஸ்ரீரங்கம் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தின் வீடியோ காட்சிகள்…!

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் இந்தியாவில் உள்ள 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து, காணொளி காட்சி வாயிலாக, நாளை (22.05.2025) திறந்து வைக்க உள்ளார். அதில், ஶ்ரீரங்கம் ரயில் நிலையமும் ஒன்று. இந்த ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ. 6.18 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள நுழைவு வாயில், பயணிகள் காத்திருப்பு அறை, டிக்கெட் கவுண்ட்டர்கள் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் பழைய நுழைவாயில் இடிக்கப்பட்டு, ஶ்ரீரங்கம் கோவில் கோபுரம் மாதிரியான முகப்பு அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையம் முன்பு செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பயணிகளின் பயன்பாட்டிற்காக கழிவறைகள், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் அமர்வதற்கான நாற்காலிகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், சிசிடிவி, வைஃபை வசதி, நகரும் படிக்கட்டுகள், லிப்ட் வசதி, கூடுதல் குடிநீர் குழாய்கள், கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்தும் வகையில் ரயில் நிலைய நுழைவு வாயிலில் சரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் குறைந்த மின் சக்தியை பயன்படுத்தும் வகையில் ரயில் நிலைய கட்டிடங்கள் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்