ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் காலமானார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று ஜனவரி 10 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு 17ம் தேதி கடைசி நாளாகும். அதேவேளை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு திமுக சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வி.சி.சந்திரகுமார் தற்போது திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியில் உள்ளார். தேமுதிகவில் இருந்த சந்திரகுமார் பின்னாளில் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.