கோவை சித்தாப்புதூர் பகுதியில் பா.ஜ.க மகளிரணி சார்பில் பெண்களுக்குத் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிறகு பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் “வடமாநிலத் தொழிலாளர்கள் ஊருக்குக் கிளம்பியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடந்த இரண்டு நாட்களாக அவர்களுடைய தொழிலை தொடர முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள் இன்னும் பல்வேறு இடங்களில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு துறைகளில் இது எதிரொலித்து வருகிறது. ஆரம்பத்திலேயே தமிழக அரசு சரியாக கையாளததால் மிகப்பெரிய பூதாகரமான ஒன்றாக மாறியிருக்கிறது. அப்போதே புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. எனினும் தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாஜக ஒத்துழைப்பு வழங்கும். 2019 க்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளாட்சி தேர்தல் தவிர்த்து, வலுவாக தேர்தலை சந்தித்தது. நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் வெற்றியை ஈட்ட முடியவில்லை என்றாலும் சட்டமன்ற தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்து சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமான கூட்டணியாக செயல்படுகிறோம். ஒரு கட்சி கொள்கையை மற்றொரு கட்சி ஏற்க முடியாது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜகவில் இருந்து விலகியவர் தலைமை பற்றி சொன்ன கருத்துகளால் கட்சிக்குள் இருப்பவர்களுக்கு மன வருத்தம் உள்ளது. இதனால் உணர்ச்சிவசப்பட்டு சொல்லும் கருத்துகள் கூட்டணிக்குள் பாதிப்பை ஏற்படுத்தாது. சில எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துள்ளது. இருந்தாலும் பலமான கூட்டணியாக தேர்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும். திமுக ஆட்சியை கவிழ்க்க மற்றவர்கள் சதி செய்ய வேண்டியதில்லை. அதற்கு அவர்களே தகுதியானவர்கள். எதிர்கட்சிகளை பார்த்து முதலமைச்சர் பயப்பட வேண்டாம். அமைச்சர்கள், குடும்பத்தை பார்த்து தான் அவர் பயப்பட வேண்டும். அண்ணாமலையின் தைரியமான பேச்சு, வேகமான செயல்பாடு என்னை ஈர்க்கக்கூடியது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரோடு தன்னை ஒப்பிட்டது, தலைமை பண்பை வெளிப்படுத்தும் வகையில் தான். அதை திரித்து அவர்களின் பர்சனாலிட்டி உடன் ஒப்பிடுவது தவறு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் செயல்பாடுகளில் மாற்று கருத்து இருந்தாலும், அவர்களின் ஆளுமைகள் ஏதொவொரு வகையில் அனைவரையும் ஈர்க்கக்கூடியது. ஈரோடு இடைத்தேர்தலின் ஆரம்பத்தில் கூட்டணிக்குள் பிரச்சனை இருந்தது. பின்னர் அது சரியாகிவிட்டது. இந்த கூட்டணி நன்றாக உள்ளது எனத் தெரிவித்தார்.
