தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ந் தேதி அன்று துவங்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சிக்குரியதாகும்.கோவையில் 9000 கோடி செலவிலும், மதுரையில் 8,500 கோடி செலவிலும் மெட்ரோ ரெயில் திட்டம் துவங்கப்படும் என்று அறிவித்துள்ளது மிகவும் பயனுள்ள திட்டமாகும். விருதுநகரில் 1800 கோடியில் ஜவுளி பூங்கா பணிகள் நடைபெற்று வருவதோடு, சேலத்தில் 880 கோடியில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 500 கோடியில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் விரிவாக்கம் பள்ளிக் கல்விதுறைக்கு 40,299 கோடி ஒதுக்கீடு பத்திரப் பதிவு கட்டணம் குறைப்பு, ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட அறிவிப்புகள் பெரிதும் வரவேற்கதக்கவை. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.