மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த 3, 4 ம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மழை இல்லை என்றாலும் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. இதனால் சென்னை உள்பட 4 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் வெள்ள நீரை வடிய வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மழை வெள்ளத்தின் காரணமாக சாலைகள், பாலங்கள் பொது கட்டிடங்கள் என பல்வேறு கட்டமைப்புகள் பெரும் சேதமடைந்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியை உடனடியாக வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.மேலும், வெள்ள பாதிப்புகளை கணக்கிட மத்திய குழுவை அனுப்பவும் கோரி இருந்தார். இந்நிலையில் புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங், டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று ( 07.12.2023 ) சென்னை வந்தார். அவரை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங், ஹெலிகாப்டரில் சென்று புயல், வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல். முருகன் உடன் சென்றார். பின்னர் மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பிரதமர் மோடியும், புயல், வெள்ளை பாதிப்பு குறித்து முதலமைச்சா் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.