திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி மற்றும் காந்தளூர் ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று( ஜூலை 16) நடைபெற்றது. முகாமிற்கு திருச்சி கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது ஆர்டிஓ அருள் பிரகாசம், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கும்பக்குடி கங்காதரன் உட்பட அரசு அலுவலர்களும், கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், புரட்சிகரமான இந்த திட்டம் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 13 துறைகள் மூலம் 46 வகையான சேவைகள் வழங்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.408 கோடி மதிப்பீட்டில், ‘முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே ரூ128 கோடி மதிப்பீட்டில் 38 ஏக்கர் பரப்பளவில் ‘அண்ணா கனரக வாகன சரக்கு முனையம், ரூ.236 கோடி மதிப்பீட்டில் 22 ஏக்கர் பரப்பளவில் ‘பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி’ அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது. ரூ290 கோடி மதிப்பீட்டில், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், ரூ18 கோடியே 9 இலட்சம் மதிப்பீட்டில் ‘பறவைகள் பூங்கா, ரூ.150 கோடி மதிப்பீட்டில் ‘சர்வதேச ஒலிம்பிக் அகாடமி, ரூ3 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு அரங்கம், ரூ4 கோடியே 27 இலட்சம் மதிப்பீட்டில் பச்சமலை சுற்றுலா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொழில் புரட்சி ஏற்படுத்திட மணப்பாறையில், 1100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் உலகின் முன்னணி நிறுவனங்களான ஜபில், பெப்சிகோ தொழில் துவங்க உள்ளார்கள். இதனால் 10,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், ரூ.400 கோடி மதிப்பிலான டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு அந்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளில், 26 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் திருச்சிக்காக மட்டுமே நம்முடைய முதலமைச்சரால் தரப்பட்டிருக்கிறது.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 4 லட்சத்து 42 ஆயிரத்து 124 பேர் பயன் அடைகிறார்கள். புதுமைப்பெண் மாணவிகள் 34 ஆயிரத்து 784 பேர் பயனடைகிறார்கள். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 16 ஆயிரத்து 955 மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில் 86 ஆயிரம் பிள்ளைகள் பயன் அடைகிறார்கள். முதல்வரின் முகவரி திட்டத்தில், தீர்வு காணப்பட்டது 3 இலட்சம் மனுக்கள். அதாவது 3 இலட்சம் குடும்பங்கள். நான் முதல்வன் திட்டத்தில், 68 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 72 ஆயிரத்து 767 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 5 ஆயிரத்து 843 விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 70 ஆயிரத்து 360 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4 ஆயிரத்து 160 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. ரூ99 ஆயிரத்து 181 கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 4000 வீடுகள், 54 ஆயிரத்து 428 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.