ட்விட்டரில் பணம் செலுத்தாமல் உள்ள பயனர்களின் ப்ளூ டிக்குகளை, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளு டிக், ஆட்குறைப்பு, என்று பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பயனர்களின் பழைய ப்ளூ டிக்-க்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ட்விட்டர் பயனாளர்களின் வெரிஃபைடு கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக்கை தொடர்ந்து பெற இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியிருந்த எலான் மஸ்க், கட்டணம் செலுத்தாத பயனர்களின் அந்த ப்ளூ டிக் குறியீடு விரைவில் அகற்றப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தார். அதன் அடிப்படையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பணம் செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக் குறியீடுகள் அகற்றப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அந்த வெரிஃபைடு ப்ளூ டிக் தொடர்ந்து வேண்டுமானால் பயனாளர்கள் சந்தாதாரர்களாக மாற வேண்டும்” எனவும் ட்விட்டர் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இனி உறுதிப்படுத்தபட்ட ப்ளூ டிக் சேவை வேண்டும் என்றால் ட்விட்டர் பயனாளர்கள் மாதம் 8 ரூபாய் கட்டணம் செலுத்தி ட்விட்டர் ப்ளூ சேவையை பெற வேண்டும். ட்விட்டர் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் ப்ளூ டிக் குறியீடுகளை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ப்ளூ டிக்கிற்கான சந்தா திட்டத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.