Rock Fort Times
Online News

தூத்துக்குடி: வி.ஏ.ஓ. கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை…

ஐந்தே மாதத்தில் அதிரடி தீர்ப்பு...

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் ( வயது 53). இவர், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். அப்போது தாமிரபரணி ஆற்று படுகையில் லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெறுவதாக முறப்பநாடு காவல் நிலையத்தில் லூர்து பிரான்சிஸ் புகார் தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள் கடந்த ஏப்ரல் 25ம் தேதி லூர்து பிரான்சிஸ் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியன் மற்றும் அவரது உறவினரான மாரிமுத்து ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், மணல் கொள்ளையர்கள் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வி.ஏ.ஓ. கொலை வழக்கில் 5 மாதங்களில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்