திருச்சி கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்தகுமார் . இவர் திருச்சி ரயில்வே மண்டலத்தில் பரிசோதராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் ‘சேது’ அதிவிரைவு ரயிலில், திருச்சியில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் அரவிந்த் குமார் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அந்த ரயிலில் ஏறி பணியில் சேர்ந்தார். இந்த இரயில் திருச்சியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் வழியில், டிக்கெட் பரிசோதகர் அரவிந்துக்கும்,பயணி ஒருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அந்த பயணி சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவி பிரிவு அலுவலராக பணியாற்றிவருகிறார். அந்த தலைமைச் செயலக ஊழியர் ராமேஸ்வரத்தில் வழிபாட்டை முடித்துவிட்டு இரயிலில் பணிக்கு திரும்புகையில் பரிசோதகருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முத்தியதில் டிக்கெட் பரிசோதகரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரயில்வே டிக்கெட் பரிசோதகர் அரவிந்த் குமார், தன்னை பயணி ஒருவர் குடிபோதையில் தாக்கிவிட்டதாக விழுப்புரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இருவரையும் விழுப்புரத்தில் இருந்து விசாரணைக்காக, இரயில்வே பாதுகாப்பு படையினர் திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர் டிக்கெட் பரிசோதகர், எஸ்.ஆர்.எம்.யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் முன்னிலையில் திருச்சி ரயில்வே போலீசில் புகார் அளித்தாா். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் எஸ்.ஆர்.எம்.யூ தொழிலாளர்கள், ரயில் நிலையம் முன்பு டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், தாக்கிய வரை உடனடியாக கைது செய்ய கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தாக்கியதாக கூறப்படும் தலைமைச் செயலக அதிகாரியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சக டிக்கெட் பரிசோதகர்கள் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேட்டி அளித்த அரவிந்த்குமார் நான் கடந்த 8 வருடங்களாக டிக்கெட் பரிசோதராக தமிழகத்தில் பணியாற்றி வருகிறேன். இது போன்ற சம்பவம் நடைபெற்றது இல்லை ஆனாலும் தற்போது என் மீதான தாக்குதல் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. நான் ரயிலில் தாக்குதலறிக்கு உள்ளான போது பணியில் இருந்த போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பாா்த்தது, எனக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாக கண்ணீர் மல்க கூறினார்.