திருச்சி, பொன்மலையில் மாவடிகுளம் அமைந்துள்ளது.இந்த குளம் 147 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.இதன்மூலம் சுற்றுவட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.இந்தநிலையில் பொன்மலை கம்பி கேட் உள்ளிட்ட பகுதியில் ரயில்வே பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு மண் தேவைப்படுவதால் பொதுப்பணி துறையினிடம் அனுமதி பெற்று இரண்டரை ஏக்கர் பரப்பளவில் 3 அடி ஆழத்திற்கு மண் அள்ளிக் கொள்வதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி பெற்று மண் அள்ளி வருவதாக கூறப்படுகிறது.அவ்வாறு மண் அள்ளப்படும் இடத்தில் தனியார் லாரி உரிமையாளர்கள் சிலர் ஜேசிபி இயந்திரம் மூலம் இரண்டரை ஏக்கருக்கு பதிலாக சுமார 7 ஏக்கர் பரப்பளவிலும், 3 அடிக்கு பதிலாக சுமார் 6 அடி ஆழம் வரை குளத்து மண்ணை அள்ளி ரயில்வே பணிக்கு மட்டுமல்லாது வெளியிடங்களுக்கும் கொண்டு செல்வதாக நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம் மற்றும் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவடி குளத்தில் மண் அள்ளிய பத்துக்கும் மேற்பட்ட லாரிகளையும், ஐந்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களையும் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த கிழக்கு தாசில்தார் சக்திவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு சம்பந்தப்பட்ட லாரிகள் மண் அள்ளுவதற்கு உரிய பர்மிட் வைத்துள்ளனவா என ஆய்வு செய்து வருகிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.