திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகள் கிருபா நந்தினி மயக்கவியல் நிபுணர். இவர் ஒரு வெப்சைட்டில் தனது பயோடேட்டாவை வேலைக்காக பதிவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து சில மர்ம ஆசாமிகள் செல்போன் நம்பரில் வாட்ஸ் அப் காலில் கிருபா நந்தினிடம் ஏர் ஆசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளனர். அப்போது டிக்கெட் கவுண்டரில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி ஆன்லைன் மூலம் நேர்முகத் தேர்வையும் நடத்தினர். மேலும் வேலைக்கு சேர வேண்டும் என்றால் பயிற்சி கட்டணமாக ரூ.1,03,947 செலுத்த வேண்டும் என கூறினர். மேலும் அவரது செல்போன் நம்பருக்கு கியூ ஆர் கோடு ஒன்றையும் அனுப்பி வைத்தனர். மோசடி பேர்வழிகளின் ஏமாற்று வித்தையை உணராமல் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவரும் பலரிடம் கடன் வாங்கி மேற்கண்ட தொகையை கூகுள் பே மூலம் அனுப்பினார். பின்னர் மோசடி ஆசாமிகள் பணி நியமன ஆணை விரைவில் அனுப்பி வைக்கப்படும் என இரண்டு மாதமாக காலம் தாழ்த்தி வந்தனர். அதன் பின்னர் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட கிருபாநந்தினி திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.