திருச்சி, வயலூர் முருகன் கோவில் நுழைவு வாயில் கட்டுமான பணியின் போது திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு- 4 தொழிலாளர்கள் காயம்…!( வீடியோ இணைப்பு)
திருச்சி, வயலூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன. இந்த கோவிலில் பிப்ரவரி 19ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது . இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக முருகன் கோவிலுக்கு செல்லும் பகுதியில் இருந்த வளைவு(ஆர்ச்) பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு புதிய ஆர்ச் கட்டப்பட்டு வருகிறது. தனியார் ஒப்பந்ததாரர் மூலம் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சாரம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று (06-02-2025) பணியின் போது எதிர்பாராத விதமாக அந்த ஆர்ச் இடிந்து விழுந்தது. இதில் 4 தொழிலாளர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கும்பாபிஷேகத்திற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அவசர, அவசரமாக நுழைவாயில் அமைக்கும் பணி நடந்ததால் இந்த சம்பவம் நேரிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Comments are closed.