திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு – சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் எம்.பிரதீப் குமார் பேட்டி !
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என புகழப்படுவதுமான,திருச்சி,ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் வருகின்ற 30-ந் தேதி திருநெடுதாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி ஜனவரி 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பகல் பத்து உற்சவம் 31-ந் தேதி முதல் தொடங்கி ஜனவரி 9-ந்தேதி வரை நடக்கிறது. ஜனவரி 10-ந்தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு அதிகாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் முதல் ஜனவரி 20-ந் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று கோயில் வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகர காவல் ஆணையர் காமினி, துணை ஆணையர் செல்வகுமார்.கோவில் இணை ஆணையர் மாரியப்பன், வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன், காவல்துறையினர், வருவாய்த் துறையினர்,இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள், போக்குவரத்து துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறவிருக்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது, வைகுண்ட ஏகாதசியில் பக்தர்கள் பங்கு பெற ஆன்லைன் மூலமாகவோ,அல்லது நேரடியாகவா அனுமதி சீட்டு வழங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.. வைகுண்ட ஏகாதசி உற்சவ நாட்களில் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கு கலர் மற்றும் க்யூ.ஆர் கோடு முறையில் அனுமதி சீட்டு வழங்குவது தொடர்பாக ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும். பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி காவல்துறையினர் எண்ணிக்கை அதற்கு ஏற்றார் போல் வழங்கப்படும் . இவ்வாறு கலெக்டர் பிரதீப் குமார் கூறினார்..
Comments are closed.