திருச்சியில் பரபரப்பு : பள்ளி விழாவில் சாமியானா பந்தல் சரிந்து விழுந்து மாணவர்கள் காயம்..
போலீசார் விசாரணை..
திருச்சி கருமண்டபம் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் இன்று ( 13.06.2023 ) காலை, நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பள்ளி வளாகத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு மாணவர்கள் அமர வைக்கப்பட்டு இருந்தனர். விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதில் பின்பக்க சாமியானா பந்தல் திடீரென சரிந்து விழுந்தது. இதில் பந்தல் போட பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் மாணவர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதில் 3 மாணவர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் சில மாணவர்கள் பந்தலுக்குள் சிக்கி காயம் அடைந்தனர். ஒரு ஆசிரியருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. நாளாபுறமும் மாணவர்கள் சிதறி ஓடினர்.
அதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சில மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்று தேடினர். பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமியானா பந்தல் போட்ட 5 தொழிலாளர்களை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். மாவட்ட கல்வி அதிகாரியும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த சம்பவம் கருமண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.