Rock Fort Times
Online News

திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9ம் தேதி திறப்பு:- விழா மேடை அமையும் இடத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார்…!

திருச்சியில் ஏற்கனவே மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரு பேருந்து நிலையங்கள் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் தீர்ந்த பாடில்லை. இதனை கருத்தில் கொண்டு பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த விசாலமான பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.900 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளித்த அவர், முதல் கட்டமாக ரூ.493 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டதோடு புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல்லையும் நாட்டினார். அதன் பிறகு கட்டுமான பணிகள் தொடங்கின. பேருந்துகள் நிறுத்துமிடம், தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம், லாரிகள் முனையம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், அஞ்சல் நிலையம் மற்றும் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் 115.68 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. எஞ்சிய பணிகளையும் விரைவாக முடித்து மே 9ம் தேதி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. இதில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழாவில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் விழா பேருரை ஆற்றுகிறார்.  இதற்கான விழா மேடை புதிய பேருந்து நிலைய வளாகத்திலேயே அமைக்கப்பட உள்ளது. அதற்கான இடம், சீரமைப்பு பணிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட பணிகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது நகரப் பொறியாளர் சிவபாதம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்த நிறுவன பொறியாளர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்