திருச்சி கன்டோண்மென்ட் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க்காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இறகு பந்து மைதானம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அதற்கான கல்வெட்டியில் எம்.பி சிவா பெயர் இடம் பெறவில்லை. மைதான திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர் நேருவிடம் சிவாவின் ஆதரவாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். சரியான பதில் கிடைக்காததால் அமைச்சர் நேருவின் காருக்கு முன்பு கருப்புக்கொடி காட்டினர். அந்த நேரத்தில் நேருவின் ஆதரவாளர்களும் எம் பி சிவா ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா எம்பியின் வீட்டை அடித்து சிதைத்தனர் . திருச்சி செசன்ஸ் நீதிமன்ற போலீசார் இரு தரப்பிலும் விசாரணை நடத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர் அங்கேயும் கே என் நேருவின் ஆதரவாளர்கள்உள்ளே புகுந்தும் தாக்குதல் நடத்தினர். திருச்சி திமுகவின் உட்கச்சிப் பூசலால் காவல் நிலையத்தில் சென்று தாக்குதல் பற்றிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் பகரைனில் ஒரு கருத்தரங்கு நிகழ்வை முடித்துக் கொண்டு இன்று காலை திருச்சிக்கு விமானம் மூலம் வந்த திருச்சி சிவா எம் பி, நேருவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட தமது வீட்டையும் வாகனத்தையும் கண்டு வேதனைப்பட்டார். இதுகுறித்து செய்தியாளர்கள் சிவாவை கேட்டபோது, நான் தனி நபர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன். நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டிற்காக பக்ரைன் சென்று இருந்தேன்.
என் வீட்டில் நடந்த தாக்குதல் குறித்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை, கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை .யாரிடமும் சென்று புகார் அளித்ததும் இல்லை. நான் அடிப்படையில் முழுமையான, அழுத்தமான திமுக கட்சிக்காரன். தனி மனிதனை விட இயக்கம் பெரிது, கட்சி பெரியது என்று எண்ணுபவன் நான். இப்போது நடந்து இருக்கிற இந்த நிகழ்ச்சி மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. நான் ஊரில் இல்லாத போது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர். என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி மற்றும் எனது நண்பர்கள் வயது முதிர்ந்தவர்கள் எல்லாம் காயப்பட்டு உள்ளனர். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது, ஆனால் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை. மன சோர்வில் உள்ளேன். மனசு சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தியதில்லை. இந்த தாக்குதல் சம்பவம் எனக்கு பெரும் வேதனையை தந்துள்ளது, பிறகு முழு விபரமாக உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்தார். பின்னர் தனது இல்லத்தை பார்வையிட்ட திருச்சி சிவா, தனது நண்பர்களுடன் கிளம்பி சென்றார். இந்த தாக்குதல் சம்ப வத்தை தொடர்ந்து திமுக தலைமையகம் நேருவின் ஆதரவாளர்கள் 5 பேர் மீது கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.