பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பொதுமக்கள் அவதி அடைந்தனர்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக பட்ஜெட்டில் புறக்கணித்ததை கண்டித்தும்,புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்கவேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிவரன்முறை செய்திடவேண்டும், தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பிடவேண்டும்,7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிடவேண்டும், தமிழ்நாடு முதல்வர் பங்கேற்ற வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதல்வரிடம் ஜாக்டோ- ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் துறை பிரிவு வாரி ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்
என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர் .தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ( செவ்வாய்) வேலை நிறுத்தபோராட்டம் நடைபெற்றது.
