திருச்சி மாவட்டம், தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் முறைகேடு? -அதிகாரிகள் நேரில் விசாரணை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், தொட்டியம் பேருந்து நிலையம் எதிரே திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக ரவி என்பவரும், நகை மதிப்பீட்டாளராக பாஸ்கர் என்பவரும், அலுவலக உதவியாளராக ராஜபாண்டி என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் வைப்பு தொகையிலிருந்து பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால், அவரை வங்கி மேலாளர் ரவி பலமுறை அலைய விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வைப்புத்தொகை வைத்திருந்த வாடிக்கையாளர், மேலாளர் ரவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், மற்றொரு வாடிக்கையாளர் அடகு வைத்த நகையை திருப்பிக் கொடுக்காமலும், நகை கடன் கேட்டு வந்திருந்த நபருக்கு நகையை பெற்றுக் கொண்டு கடன் தொகையை தராமல் வங்கி மேலாளர் இழுத்தடித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த 3 பேரும் வங்கியின் மேலாளர் ரவியிடம் விபரம் கேட்டுள்ளனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், மேலும் சந்தேகம் அடைந்த அவர்கள் 3 பேரும் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வங்கியில் வாடிக்கையாளர்கள் திரண்டனர். அவர்கள் அனைவரும் வங்கி மேலாளரிடம் சென்று தங்களது வரவு- செலவு விபரங்களை கேட்டுள்ளனர். அப்போதும் அவர் சரியான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நகை அடகு கடன் மற்றும் வைப்புத் தொகையில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று அச்சமடைந்தனர். இதனால், வங்கியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீசார், வங்கிக்கு விரைந்து வந்து வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது
வாடிக்கையாளர்கள் நகை அடகு கடன் மற்றும் வைப்புத் தொகையில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாகவும், வங்கியின் உயரதிகாரிகள் நேரில் வந்து வாடிக்கையாளர்களின் வரவு -செலவு கணக்குகளை சரி பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் அனைவரும் வங்கியில் இருந்து வெளியே சென்றனர். இந்நிலையில் மத்திய கூட்டுறவு வங்கியின் திருச்சி உதவி பொது மேலாளர் செல்வகுமார் தலைமையில் அதிகாரிகள் வங்கிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.