திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் தற்போது 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா காலம் முடிந்து உள்நாட்டில் தங்கி இருந்தவர்கள் பாதுகாப்பு கருதி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களில் ஒன்பது பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சிறப்பு முகாம் நுழைவாயிலில் மூன்று பெண்கள் ஒரு சிறுவன் உள்ளிட்ட ஆறு பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய முகாம் வாசிகளுக்கு அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான உரிய ஆவணங்கள் மத்திய அரசிடம் இருந்து இதுவரை வராததால் அவர்கள் முகாமில் இருந்து வெளியேற்றப்படாமல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே தங்களை விடுவிக்க வேண்டும் என்று கூறி முகாம் வளாகத்திற்குள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடைய உறவினர்கள் முகாம் நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
