சென்னை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுமதி, உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு தஸ்வந்த்குமார் மற்றும் லிங்கேஷ் குமார் ஆகிய 2 மகன்கள். இந்தநிலையில், இன்று(13-03-2025) அவர்கள் வீட்டு கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர், 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பாலமுருகன் குடும்பத்திற்கு ரூ.5 கோடி கடன் இருப்பதாகவும், இதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்தது. இருந்தபோதிலும், உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.