Rock Fort Times
Online News

முசிறி அருகே உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு வந்தபோது துயரம்: ஹோட்டல் மேலாளர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி…!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன். இவரது மகன் குகன் (22). ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, ஸ்ரீராம சமுத்திரத்தில் உள்ள நண்பர் வீட்டு காது குத்து நிகழ்ச்சிக்காக குகன் வந்திருந்தார். அப்போது ஸ்ரீராமசமுத்திரம் காவிரி கரை அருகே உள்ள மதுரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று விட்டு அருகில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக தனியாக சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.அவரை உறவினர்கள் தேடிய நிலையில் குகனின் செல்போன் மற்றும் செருப்பு ஆகியவை ஆற்றங்கரையில் இருந்தது. உடனே உறவினர்கள் தண்ணீரில் இறங்கி அவரை நீண்ட நேரம் தேடினர். இருந்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் இன்று( ஜூன் 24) மாயனூர் கதவணை 1-வது ஷட்டரில் ஒரு ஆணின் சடலம் மிதப்பதை பார்த்த அப்பகுதியினர் இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீராமசமுத்திரத்தில் காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி காணாமல் போன குகன் என்பது தெரிய வந்தது. பின்னர் குகன் உடல் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்