பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்து வந்தனர். அப்போது பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான மெத்யூவ் கார்மென்ட்ஸ் முன்பக்கம் அண்ணாமலையார் படமும் பின்பக்கம் அன்னை தெரசா படம் மற்றும் அந்த நிறுவனத்தின் பெயரும் பொறித்த விபூதி பாக்கெட்டுகளை பிரசாதமாக பக்தர்களுக்கு அளித்து வந்தனர். இதுகுறித்து இந்து முன்னணியினர் கோயில் இணை ஆணையர் குமரேசனிடம் முறையிட்டனர். இது போன்று பக்தர்களை மதமாற்றம் செய்ய தூண்டும் வகையில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கோவில் இணை ஆணையர் குமரேசன் இந்த செயலில் ஈடுபட்ட சோமநாத குருக்கள், முத்துக்குமாரசாமி குருக்கள் ஆகிய இருவரையும் 6 மாதத்திற்கு பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் திருக்கோவிலில் 6 மாத காலத்தில் சாமிக்கு எந்த அபிஷேகம், ஆராதனைகள் செய்யக்கூடாது எனவும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.