திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் காலை, மாலை என இருவேளையும் விதவிதமான மலர் மாலைகள் சூட்டப்படுகிறது. இதற்காக 12 வகைக்கும் மேலான மலர்களும், துளசி, தவனம் போன்ற 6-க்கும் மேற்பட்ட இலைகளும் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரண நாட்களில் தினமும் 100 கிலோ பூக்கள் மூலவரின் மலர் அலங்காரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதுவே ஒவ்வொரு வியாழக்கிழமையும் மூலவருக்கு பூக்களால் மட்டுமே முழு அலங்காரம் செய்யப்படும். இதனை பூ அங்கி சேவை என அழைக்கின்றனர். இதற்கு 200 கிலோ பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியில் ஏழுமலையானுக்கு சாத்தப்படும் மலர் மாலைகள் குறித்து முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிகாமணி மாலை, சாலைக்கிராம மாலை, கண்டசரி மாலை, வக்ஷஸ்தல மாலை, சங்கு, சக்கர மாலை, தாவள மாலை, திருவடி மாலை என ஏழுமலையானுக்கு பல்வேறு வண்ண மலர்களால் தினமும் அலங்காரம் செய்யப்படுகிறது. பக்தர்களும் விதவிதமான அலங்காரங்களில் ஏழுமலையானை தரிசித்து பரவசம் அடைகின்றனர்.

Comments are closed.