திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. விழாவின் ஒவ்வொரு நாளும் கோவில் வளாகத்தில் சமய சொற்பொழிவு, திருவாசகம் முற்றோதுதல், பரத நாட்டியம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் திருவிழாவான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மற்ற கால பூஜைகள் நடைபெற்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. அலைகடலென திரண்டு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மாசி திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். நாளைய தினம் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர்.