Rock Fort Times
Online News

‘சபாஷ் ‘பெற்றது பட்ஜெட் திருக்குறள் !

தமிழ்நாடு 2023-2024 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் வாசிப்பிற்கு முன்பு அவர் ஒரு திருக்குறளையும் சுட்டிக் காட்டினார். அந்தத் திருக்குறளுக்கு ஏற்ப இந்த பட்ஜெட்டில் சில விசயங்களைச் செய்து இருப்பது, பொருத்தமான குறள் தேர்வு என்னும் வகையில் கவனம் பெற்றுள்ளது.
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி
– என்னும் அந்தக் குறள் இறைமாட்சி அதிகாரத்தில் 390-வது குறளாக உள்ளது. அதாவது நல்வாழ்விற்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும் மக்களைப் பேணிக் காப்பதே ஒரு அரசுக்கு பெருமை சேர்க்கும் என்பது இதன் பொருள்.மக்கள் நல்வாழ்வு என்னும் வார்த்தையின் அடிப்படை விளக்கத்தை, மகளிர் நலனில் பொருத்திப் பார்க்க இயலும். வேலைக்குச் செல்லாத இல்லத்தரசிகள் தங்கள் கணவர்களிடம் இருந்தும், பிள்ளைகளிடம் இருந்தும் தொகையை எதிர்பார்க்காமல் ஓரளவு தங்களுக்கான வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்துகொள்ள அவர்களுக்கு செப்டம்பர் 15 முதல் மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே உயர் கல்வி பயிலும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டமும், பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணமும் உள்ள நிலையில் இது மகளிர் நலனில் அடுத்த பாய்ச்சல்!
அதே குறளில் வரும் நிலையுணர்ந்து கருணை காட்டல் என்பதற்கு மாற்றுத்திறனாளிகளின் நிலை உணர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1500 ஆக அதிகரிப்பு. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான ஓய்வூதியம் 1500 இருந்து 2000 ஆக அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டுகின்றனர். நல் ஆட்சியின் அடையாளம் சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பது. அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா என்கின்ற அறிவிப்பெல்லாம், அதன் அம்சம் தான். அந்த வகையில் நிதி அமைச்சர் குறளுக்கு ஏற்ற திட்டங்கள் சிலவற்றையும் பட்ஜெட்டில் தாக்கல் செய்து இருப்பதால், இந்த குறள் இன்றைய பட்ஜெட்டில் பொருத்தமானதாகவும் அமைந்துவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்