Rock Fort Times
Online News

பகுத்தறிவு இல்லாததால் தான் சாட்டையை தூக்கிக் கொண்டு வருகிறார்கள்: திருச்சியில் கி.வீரமணி விளாசல்…!

இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 13-வது மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டின் நிறைவாக திருச்சி புத்தூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் தி.க.தலைவர் கி.வீரமணி, ஆ.ராசா எம்.பி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், ஆ.ராசா எம்பி பேசுகையில், பகுத்தறிவு சிந்தனையை இந்தியாவில் இருவர் தான் பேசினார்கள் வடக்கில் அம்பேத்கர், தெற்கில் பெரியார். அவர்கள் நடத்திய போராட்டம் இன்னமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதனால் இன்னமும் அம்பேத்கரை விமர்சிக்கிறார்கள். எந்த ஆதிக்கத்தையும் ஏற்று கொள்ளாத கொள்கை பகுத்தறிவு கொள்கை. அது தான் பெரியார் கொள்கை, அம்பேத்கர் கொள்கை. நேரு ஆட்சிக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் காங்கிரஸ்குள்ளேயே இருந்தது. நேரு அமைச்சரவையில் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இருந்தார்கள். இருந்த போதும் சோமநாதர் ஆலயத்தை அரசு செலவில் கட்டமாட்டேன் என நேரு உறுதியாக இருந்தார். அந்த பகுத்தறிவுள்ள பிரதமர் அமர்ந்திருந்த நாற்காலியில் இன்று யார் யாரோ அமர்ந்துள்ளார்கள். பிள்ளையாருக்கு பிளாஷ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது என இன்றைய பிரதமரே கூறுகிறார். ஒரு பெண்ணுக்காக சாட்டையில் அடித்து கொள்ளும் அண்ணாமலை மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளுக்கு என்ன செய்தார். அங்கு நடந்த வன்முறைகளுக்கு நாங்கள் யார் யாரையெல்லாம் சாட்டையில் அடித்திருக்க வேண்டும்? இதற்கெல்லாம் காரணம் பகுத்தறிவு இல்லாதது தான் என்று பேசினார்.

அடுத்து நடிகர் சத்யராஜ் பேசுகையில், பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்கள் ஒன்றிணைந்து இந்தியாவை பெரியார் மயமாக்கி அடுத்த முறை மாற்றத்தை கொண்டு வர வேண்டும். தனி மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தடையே மூட நம்பிக்கை தான். அதை தூக்கி எறிந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றார்.

இறுதியாக தி.க.தலைவர் கி.வீரமணி பேசுகையில், குன்றக்குடி அடிகளார் அணிந்த காவி ஏமாற்று காவி அல்ல, மக்களுக்கு தொண்டாற்ற கூடிய காவி. பெரியார், தன் கருத்துக்களை கூறி விட்டு அதை அப்படியே நம்ப வேண்டாம். உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து அதை நம்புவதா வேண்டாமா என முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்பார். ஆனால் ஆத்திகவாதிகள் அனைத்தையும் நம்புங்கள் என கூறுவார்கள். அதுதான் நாத்திகத்திற்கும் ஆத்திகத்திற்கும் உள்ள வித்தியாசம். பகுத்தறிவு இல்லாமல் ஐ.பி.எஸ் படித்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. பகுத்தறிவு இல்லாததால் தான் ஐபிஎஸ் படித்தவர் சாட்டையை தூக்கி உள்ளார். விவசாயியின் மகன் ஐ.பி.எஸ் ஆனது திராவிடர் இயக்கத்தின் சாதனை. கொரோனாவை கைத்தட்டியும், ஒலி எழுப்பியும் விரட்டலாம் என்றார்கள். ஆனால் அது போகவில்லை. தடுப்பூசி கண்டுபிடித்த பின் தான் காணாமல் போனது. அதுதான் பகுத்தறிவு. ஒரு நடிகர் ஜோதிடத்தை நம்பி தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்கு வர போகிறேன் என்றார். ஆனால் அவர் வரவில்லை. அப்படி என்றால் அவர் ஜோதிடத்தை நம்பவில்லை என்பது தான் அர்த்தம். இவ்வாறு அவர் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் திக தலைவர் வீரமணி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வீரமணி- பூஜா தம்பதியினர் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பகுத்தறிவாளர் சங்கங்களை சேர்ந்தவர்கள், திராவிடர் கழகத்தினர், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்