தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் அதன் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் இன்று(மார்ச் 26) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அச்சங்கத்தின் பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தனர். இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தனியார் மண்டபங்களில் கூட்டங்கள் நடத்தக்கூடாது என அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கூட்டத்தை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கூட்டத்தை நடத்தக்கூடாது என அதிகாரிகள் தடை விதித்ததால் மேற்கொண்டு மாநில பொதுக்குழு கூட்டத்தை நடத்தாமல் விவசாயிகள் அங்கிருந்து அதிருப்தியுடன் புறப்பட்டு சென்றனர்.

Comments are closed.